வில்லியனுார் : தனியார் மருத்துவக் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதே கல்லுாரி மாணவர், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் வெஸ்டன் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் குடிமேட்லா சிரஞ்சீவி ரெட்டி மகன் குடிமேட்லா சங்கல்ப் ரெட்டி(20). இவர், புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி விடுதியில், தங்கி இருந்தார்.சங்கல்ப் ரெட்டி, நேற்று முன் தினம் காலை, தான் பயிலும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சாப்பிட செல்லாமல் விடுதி அறையிலேயே இருந்தார்.சாப்பிடச் சென்ற சக மாணவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு வந்தபோது, மூச்சுபேச்சின்றி இருந்த சங்கல்ப் ரெட்டியை மீட்டு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE