மதுரை-''தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் போராட்டம் நடக்க உள்ளது,'' என பா.ஜ., தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் 20 வருட அரசு பணி சேவையை பாராட்டும் விதமாக, சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின் பிறந்த நாளான செப்., 17 முதல் அக்., 7 வரை நாடு முழுதும் மக்களுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி அக்., 7ல் பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடக்கும்.
இந்தியாவில், தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் கொரோனா அதிகரிக்கவில்லை. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க., அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE