தக்கலை: தனக்கென இருக்கும் பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தி மதம், சாதி, பிரதமர் முதல் முக்கிய பிரமுகர்களை தன் இஷ்டம் போல் வசைபாடிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் தற்போது கம்பி எண்ண போயிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார், மேலும் வரும் 25ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நாங்குநேரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக அமைந்துள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (அக்.,10) மாலை தக்கலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசினார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் 25ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார், இதனை தொடர்ந்து சாட்டை துரைமுருகனை நாங்குநேரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
வரம்புமீறி பேசுவது வாடிக்கை
சாட்டை முருகன் சமீப காலமாக பிரதமர், தமிழக முதல்வர், பா.ஜ., வினர் மீது அவதூறாக அத்துமீறி பேசி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏற்கனவே சில புகார்களும் இவர் மீது நிலுவையில் இருந்தது. இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காழ்ப்புணர்ச்சியால் கைது
சாட்டை துரைமுருகனை கைது செய்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‛தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் 'சாட்டை' துரைமுருகன் அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது,' எனக் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE