காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற வட மாநில கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்ணிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 6 சவரன் நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் சுங்கச்சாவடியின் பின்புறம் உள்ள ஏரி பகுதியை நோக்கி தப்பியோடியதாக அங்கிருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் 10 குழுக்களாக ஏரியை சுற்றி வளைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

ஐந்து மணிநேரமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஏரியில் பதுங்கியிருந்த ஒரு கொள்ளையனை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் தேடுதலை தீவிரப்படுத்திய போலீசார் அங்கு பதுங்கி இருந்த மேலும் இரு கொள்ளையர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE