புதுடில்லி : சீன அரசின் ஒருதலைப்பட்சமான புதிய நில எல்லை சட்டத்துக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

''இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்னையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது கவலைக்குரிய விஷயம்,'' என, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நில எல்லை சட்டம், சீன பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய சட்டம் குறித்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது:

புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி, இந்தியா - -சீனா எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள், எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE