சென்னை: ‛‛தமிழகத்தில் திருவிழா, பண்டிகை காலங்களில் 100 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க கூடாது,'' என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் ஊரடங்கில் அவ்வப்போது தளர்வு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், போதிய வருமானம் இல்லாததால் பல தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள் திறக்கவில்லை. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தியேட்டர்களில் வருமானம் கிடைக்கும் என்று அதன் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. இதனால் பள்ளிகள் உட்பட மக்கள் கூடும் இடங்களை திறப்பது ஆபத்தானது என ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானி பிரதீப் கவுரும் மறைமுகமாக தமிழக அரசை எச்சரித்துள்ளார்.
மூடிய அறைக்குள் 3 மணி நேரத்துக்கு மேலாக நெருக்கமாக மக்கள் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே, தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கியது.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச்சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருவிழா, பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களை அனுமதித்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாது. இது கொரோனா பரவலுக்கு மட்டுமே வழி வகுக்கும். ஆகையால் தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி வழங்கக் கூடாது. கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் மறந்து விடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE