இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கமாங்க் ஆற்றின் நீர், திடீரென்று கறுப்பாக மாறியது. இதனால், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. கட்டட கழிவுகளை சீனா அதிகளவில் ஆற்றில் கொட்டியதால் தான், நீர் கறுப்பாக மாறியதாக புகார் எழுந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் பிரதான நதிகளின் ஒன்றான கமாங்க் ஆற்று நீர், நேற்று காலை கறுப்பாக காட்சியளித்தது. கிழக்கு கமாங்க் மாவட்ட பகுதியில் தான் ஆற்று நீர் கறுப்பாக மாறியிருந்தது. மேலும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்து கிடந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிஅடைந்தனர். நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்று நீரை சோதனையிட்டனர்.அதிகளவில் கழிவுப் பொருட்கள் கலந்துள்ளதால் நீர் மாசடைந்து, மீன்கள் இறந்துள்ளது, சோதனையில் தெரிந்தது. இதையடுத்து, 'கமாங்க் ஆற்று மீனை யாரும் சாப்பிட வேண்டாம்' என, மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கமாங்க் ஆற்றின் கரையை ஒட்டி சீன எல்லை அமைந்துள்ளது. தங்கள் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள சீனா, கட்டுமான கழிவுகளை கமாங்க் ஆற்றில் கொட்டியது தெரியவந்தது. கமாங்க் ஆற்று நீர் மாசடைந்ததற்கு இது தான் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்தால் உண்மை தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

கிழக்கு செப்பா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., டபுக் டாகு கூறுகையில், ''கமாங் ஆற்று நீர் கறுப்பாக மாறியதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இதற்காக விசாரணைக் குழு அமைக்க வேண்டும். கமாங் ஆற்றில் இந்நிலை மேலும் சில நாட்கள் நீடித்தால் அதன்பின் ஆற்றில் எந்த உயிரினங்களும் உயிருடன் இருக்காது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE