சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று (நவம்பர் 01) திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. பிறகு இரண்டாம் அலை பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, செப்.,1 முதல், ஒன்பது - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின.

அதே நேரத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு இன்று (நவ.,01) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பல பள்ளிகளில் மேளம் அடித்தும், மாணவர்களுக்கு மாலை அணிவித்தும் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். இந்நிலையில், சென்னை மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE