சென்னை: ‛‛தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு (நவ.,1ம் தேதி முதல் 4ம் தேதி வரை) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும்.
இன்று (நவ.,1ம் தேதி): (ஆரஞ்சு எச்சரிக்கை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 2ம் தேதி: டெல்டா மாவட்டங்கள், கடலுார், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சாரி (கடலுார்) 15 செ.மீ., சேத்தியாதோப்பு (கடலுார்), பாண்டவையார் (திருவாரூர்) தலா 9 செ.மீ., திருத்துறைப்பூண்டி, திருவாரூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை (கடலுார்) தலா 7 செ.மீ., புவனகிரி, சிதம்பரம் (கடலுார்), சோழவரம் (திருவள்ளூர்), குலசேகரப்பட்டினம் (துாத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ., மன்னார்குடி (திருவாரூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), குடவாசல் , வலங்கைமான், நீடாமங்கலம் (திருவாரூர்), கிராண்ட் அணை (தஞ்சாவூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கடலுார் தலா 5 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று (1 ம்தேதி) மற்றும் நாளை (2ம் தேதி): குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று முதல் 3ம் தேதி வரை: கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நவ.,4ம் தேதி முதல் 5ம் தேதி வரை: கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.