குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., கள்ளுமடையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 54. இவர் நேற்று முன்தினம் மாலை, கருங்களாப்பள்ளியில் உள்ள தன் வயலுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பினார். அப்போது கருங்களாப்பள்ளியை சேர்ந்த சுந்தரபாண்டியன், சுரேந்தர், அகிலன், விருமாண்டி, திருப்பதி, கர்ணன் ஆகிய ஆறு பேர், தெற்கு மயிலாடி செல்லும் வழியில் உள்ள சாலை குறுக்கே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஓரமாக உட்காருங்கள் என்று கூறியதற்கு அவரை, ஆறு பேரும் தகாத வார்த்தைகளால் பேசினர். பின்னர் பாலசுப்பிரமணி தன் வீட்டிற்கு சென்றார். இரவில் அவர் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஆறு பேரும், பாலசுப்ரமணியனை மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசியும், சுந்தரபாண்டியன், சுரேந்தர், அகிலன் ஆகியோர் கட்டையாலும் தாக்கினர். தடுக்க வந்த பாலசுப்பிரமணியன் மகன் சேகரை, விருமாண்டி அரிவாளால் தாக்கியுள்ளார். மேலும் அவரது தம்பி தங்கராசுவை தாக்கியுள்ளனர். அவர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்ததும், ஆறு பேரும் தப்பினர். காயமடைந்த மூவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குளித்தலை போலீசார் விசாரித்து விருமாண்டி, 20, திருப்பதி, 19, கர்ணன், 21, ஆகிய மூவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE