சென்னை : 'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருந்த நீரை திறந்து விட்டோம்' என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, ஏன் தண்ணீர் திறந்து விட்டீர்கள்; கேரள அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை திறப்பதற்கான நடைமுறை விதிகளின்படி, திறப்பதற்கு முன், கேரள அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். எனவே, நீர் கொள்ளளவு அதிகமானதால், அக்., 27ல் கேரள அரசுக்கு, 29ம் தேதி உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 29ம் தேதி காலை 7:29 மணிக்கு, தமிழக நீர்வள அலுவலர்களால், அணை மதகுகள் திறக்கப்பட்டன. அந்த நேரத்தில், கேரள நீர்வளத் துறை அமைச்சரும், அம்மாநில அலுவலர்களும் அணையை பார்வையிட்டனர்.அணையின் உபரி நீர் போக்கியை திறக்கலாம் என்பது, தமிழக அலுவலர்கள் எடுத்த முடிவு. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த, நீர்மட்ட அளவுகளை அடிப்படையாக வைத்து, வல்லுனர் குழு வெளியிடும் அறிவிப்புகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்க வேண்டும்.
எனினும், வல்லுனர் குழு தன் முடிவுகளை, சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாற்றலாம். மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த, நீர்மட்ட அளவுகளின்படி, அணையின் நீர் மட்டம், அக்டோபர் 10 அன்று 138.50 அடியாகவும், 20ம் தேதி 137.75 அடியாகவும், 31ம் தேதி 138 அடியாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், 28ம் தேதி காலை 138.75 அடியாக நீர்மட்டம் இருந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, வைகை அணைக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் எடுத்த போதும், நீர்மட்டம் அதிகரித்தது. எனவே, உபரி நீர் போக்கிகள் வழியே தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாக இருந்தது. உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருந்த நீர் திறக்கப்பட்டது. இம்மாதம், 30ம் தேதி அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE