திருவள்ளூர்-சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையில், மழையால் அரிசி மூட்டைகள் நனைந்து, பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாத நிலை உள்ளது.பூண்டி ஒன்றியம், பாண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட, கனகவல்லிபுரம் கிராமத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடை மூலம், இப்பகுதியில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.ரேஷன் கடை இயங்கும் கட்டடம், பாழடைந்து, கூரை சேதமடைந்து, சிமென்ட் காரை பெயர்ந்து விட்டது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால், சேதமடைந்த கட்டடத்திற்குள், மழை நீர் உட்புகுந்து விட்டது.இதன் காரணமாக, கடைக்குள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படவிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகள், முழுதும் நனைந்து விட்டன.இந்த நிலையில் நேற்று காலை, அரிசி, பருப்பு வாங்கச் சென்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மழையால் நனைந்த அரிசி, பருப்பு வினியோகிக்கப்பட்டன.இவற்றை வாங்க, பொதுமக்கள் தயங்கினர். ஆனால், அனைத்து மூட்டைகளும் மழையில் நனைந்து விட்டதால், வேறு வழியின்றி, மழையால் நனைந்த பொருட்களை வாங்கிச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE