புதுடில்லி : டில்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் 1997ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 59 பேர் பலியாயினர். இதுதொடர்பாக திரையங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சல், அவரது சகோதரர் கோபால் அன்சல் கைதாயினர்.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனையாக கணக்கிட்ட உச்ச நீதிமன்றம், டில்லியில் அவசர சிகிச்சை அளிக்கும் மையம் கட்டுவதற்கு, இருவரும் தலா 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு அவர்களை விடுவித்தது.
இதற்கிடையே, தீ விபத்து வழக்கின் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக, அவர்கள் மீது ஏற்கனவே மற்றொரு வழக்கு பதிவாகி இருந்தது. அதில், ஆவணங்களை முறைகேடாக கையாண்ட நீதிமன்ற முன்னாள் ஊழியர் தினேஷ் சந்த் சர்மா மற்றும் பி.பி.பத்ரா, அனுாப் சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வழக்கின் விசாரணை டில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் நடந்தது. முடிவில், குற்றம் சாட்டப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேருக்கும், தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.சுஷில் அன்சல், அவரது சகோதரருக்கு தலா 2.25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE