சென்னை: உயிரிழந்துவிட்டதாக கருதியவரை தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

டி.பி. சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வந்து பார்த்த போது, உதயா உடலில் அசைவு இருந்தது தெரியவந்தது. உடனே அவரை, தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. துரிதமாக செயல்பட்ட ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.