சென்னை : 'பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது' என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலர் இறையன்பு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:: பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நல்லது.
தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரால் கழுவ வேண்டும் வெள்ள நீரில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் அருந்துதல் நலம். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.

குளங்கள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பார்க்க நேர்ந்தால், உடனடியாக 104ல், பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப்பானது அல்ல. வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு தேவையின்றி போகக்கூடாது.
தேங்கிய மழை நீர் மற்றும் குப்பையை, உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும்துாய்மை பணியாளர்களுக்கு உரிய முக கவசம், கை மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும்சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை குடிக்க பயன்படுத்துவதை, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்கள், முகாமில் தரப்படும் குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். தற்காலிக முகாம்களில், கொரோனா தடுப்பு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஈக்கள் கட்டுப்பாடு
குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு வைத்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும். மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுடன், பொது சுகாதாரத்துறை இணைந்து, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.