பொங்கலுார்: தேங்காய் மட்டை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் மட்டையிலிருந்து தென்னைநார், காயர் பித் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவையனைத்திற்கும் நல்ல விலை கிடைக்கிறது. தென்னை மட்டை மஞ்சி தயாரிக்கும் மில்களுக்கு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. தற்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தென்னை நார் தொழிற்சாலையை ஆரஞ்சு பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், மில்களில் தென்னை மட்டை வாங்குவது குறைந்துள்ளது. எனவே, தேங்காய் மட்டை விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன் தென்னை மட்டை ஒன்றின் விலை இரண்டு ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 75 பைசாவாக சரிந்துவிட்டது. மட்டை விலை சரிந்ததால் தேங்காய் விலையை ஒரு ரூபாய் குறைத்துக் கேட்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE