ஈரோடு: தொடர் மழை காரணமாக, ஈரோட்டில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மேட்டுப்பாளையம், ஊட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து குறைந்து விலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக மார்க்கெட்டிற்கு, 30 முதல், 35 டன் வரை காய்கறிகள் வரத்து இருந்து வந்த நிலையில், தொடர் மழையால் கடந்த ஒரு வாரமாக, 15 டன் வரை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல தக்காளி வரத்து ஐந்து டன்னுக்கும் குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து குறைவு காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு, 10 முதல், 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி, கத்திரி, வெண்டை தலா ஒரு கிலோ, 80 ரூபாய், அவரைக்காய், 60, கேரட், 65, பீன்ஸ், 85, ஊட்டி பீட்ரூட், 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE