ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் தொடர் மழையால், நெல் பயிர்கள் பாதித்துள்ளதால், இழப்பீடு வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், ஆண்டு முழுவதிலும் இரண்டு போகத்தில் நெல் சாகுபடி நடக்கிறது. கடந்த மே, மாதம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், முதல் போகத்தில், 1,400 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒன்றியம் முழுவதிலும் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடக்கிறது.இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை காரணமாக, பல இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி நின்று, நெல் பயிர்கள் சாய்ந்து, கதிர்கள் உதிர்ந்துள்ளது.மேலும், மழையால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன், நெல் அறுவடையான வயல்களில் வைக்கோல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து தகவல்கள் சேகரித்துள்ளனர்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில், ''ஒன்றியம் முழுவதிலும் சேதம் குறித்து ஆய்வு செய்ததில், ஆனைமலை, காளியாபுரம் பகுதிகளில் மழையால், 65 ஏக்கருக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது.சேதம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை வேளாண்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE