சென்னை : தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள 'வலிமை' சிமென்ட் விலையை, பொது மக்கள் வாங்கும் நிலைக்கு குறைக்க வேண்டும் என, கட்டுமான துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு சிமென்ட்ஸ் சார்பில், 'வலிமை' என்ற புதிய ரக சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விலை போக்குவரத்து செலவுகளுடன் சேர்த்து, மூட்டை 380 ரூபாய் அளவுக்கு வருகிறது. இது, கட்டுமான துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில செயலர் எஸ். ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, சிமென்ட் விலையை வெகுவாக உயர்த்தி உள்ளன. இத்தகைய சூழலில், அரசு நிறுவனம் சார்பில் வலிமை என்ற புதிய ரக சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் விலை, தனியார் தயாரிப்புகளுக்கு இணையாக, 380 ரூபாய் வரை இருப்பதால், பொது மக்கள் எளிதில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே, ஒரு மூட்டை 230 ரூபாய்க்கு 'அம்மா' சிமென்ட் விற்பனை செய்யப்படும் நிலையில், வலிமை சிமென்ட் விலை, 350 ரூபாய்க்குள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE