திருவண்ணாமலை-கொரோனா கட்டுப்பாடால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 19ம் தேதி மஹா தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்ந்து 11 நாட்கள் எரியும்; 40 கி.மீ., துாரம் தெரியும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் சந்திரசேகரர், வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், பிரம்ம தீர்த்த குளத்தில் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடால், இந்தாண்டு நேற்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
துர்கா ஸ்டாலின்
தீப விழாவுக்கு பின், 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மஹா தீபத்தை தரிசிப்பதை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனை வழிபட்டு, மஹா தீபத்தை வழிபட்டார்.கோவில் குருக்கள் சிறப்பு அர்ச்சனைகள் செய்து, பிரசாதங்கள் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE