திருப்பூர்:''சரக்கு வாகனங்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதால், உரிய இடத்தை சரக்குகள் அடைவதற்கு தாமதமாகிறது. இதை தடுக்கும் வகையில் வணிக வரி அதிகாரிகள் அடங்கிய 24 மணி நேர சேவை மையம்துவங்கப்பட வேண்டும்'' என்று கருத்தரங்கில் யோசனை தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., முறையில், புதுமைகள் மற்றும் சவால்கள் குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நேற்று நடந்தது. வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் முன்னிலைவகித்தார்.சென்னை வக்கீல் நடராஜன் பேசியதாவது:அனைத்து ஆயத்த ஆடைகள் மற்றும் டையிங், பிரின்டிங் ஜாப்ஒர்க் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிட்டிங் உட்பட இதர ஜாப்ஒர்க் சேவைகளுக்கான வரி, 5 சதவீதமாக மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வரி விகிதம் உயர்வால், டையிங், பிரின்டிங் நிறுவனங்கள், உள்ளீட்டு வரியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளமுடியும். வரி விகித உயர்வால், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பணப்புழக்கம் பாதிக்கப்படும்; இது, தவிர்க்க முடியாதது. அதேபோல், நுகர்வோரும் அதிக விலை கொடுத்து ஆடை வாங்கவேண்டிவரும்.ஜி.எஸ்.டி.,க்கு முன்பு வரை, சுங்கம் மற்றும் கலால் வரியில், 'அரியர்' என குறிப்பிட்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யயும் நடைமுறை இருந்தது. ஜி.எஸ்.டி.,ல், வரியை முழுமையாக செலுத்தினால் மட்டுமே, ரிட்டர்ன் தாக்கல் செய்யமுடியும்.நிதி நெருக்கடிகளால், வரி செலுத்த முடியாத பல வர்த்தகர்கள், ரிட்டர்ன் தாக்கல் செய்யமுடியாமல் தவிக்கின்றனர். தாமத கட்டணம், வட்டியுடன் செலுத்தவேண்டிய நிலை தொடர்கிறது.ஜி.எஸ்.டி., போர்ட்டலில், 'அரியர்' என குறிப்பிட்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் பழைய நடைமுறையை அமல்படுத்தவேண்டும். இதன் மூலம், வர்த்தகர்கள், தாமதமின்றி ரிட்டர்ன் தாக்கல் செய்வர்; வர்த்தகர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளும் தவிர்க்கப்படும்.சரக்கு கொண்டுசெல்லும் வாகனங்களை, வணிக வரித்துறை அமலாக்க அதிகாரிகள், ஆங்காங்கே நிறுத்தி, ஆவணங்களை பரிசோதிக்கின்றனர். ஒரே வாகனம் பல இடங்களில் நிறுத்தப்படுவதால், சரக்குகள் குறிப்பிட்ட இடத்தை சென்றடைவதில் வீண் காலதாமதம் ஏற்படுகிறது.சிறிய அளவிலான தவறுகளுக்கு அபராத தொகை செலுத்திவிட்டு, சரக்குகளை கொண்டுசெல்ல அனுமதிக்கலாம். இதற்காக, வணிக வரி இணை கமிஷனர், முதன்மை கூடுதல் கமிஷனர்கள் அடங்கிய அதிகாரிகளை கொண்டு, 24 மணி நேரமும் இயங்கும் சேவை பிரிவு துவக்கவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் பகுதி ஆடிட்டர்கள், பின்னலாடை உற்பத்தி துறையினர் பங்கேற்றனர். வரி பயிற்சியாளர் சங்க பொருளாளர் ரவி நன்றி கூறினார்.ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பணப்புழக்கம் பாதிக்கப்படும்; இது, தவிர்க்கமுடியாதது. அதேபோல், நுகர்வோரும் அதிக விலை கொடுத்து ஆடை வாங்கவேண்டிவரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE