பூந்தமல்லி ; பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, அவரை பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து, கொலை மிரட்டல் விடுத்த 'மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்ற ஆணழகனை, பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தியா மோகன், 31; இவர், பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், அளித்த புகார் மனு:கடந்த, 2019 ம் ஆண்டு காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன், 29, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. என், உணவு முறை குறித்து, தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை கேட்க, மணிகண்டனை அவரது, உடற்பயிற்சி கூடத்தில் சந்தித்தேன்.
கடந்த ஆண்டு, இருவரும் நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவை சென்ற போது, என்னை திருமணம் செய்வதாகக் கூறி, என்னை கட்டாயப் படுத்தி, என்னுடன் உடல் உறவு வைத்துக்கொண்டார். சில மாதங்களாக நாங்கள் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக உள்ள, வீடியோக்களை மொபைல் போனில் பதிவு செய்து, என்னை மிரட்டி வருகிறார்.எனக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்.
எனவே, மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்தனர்.கைதான மணிகண்டன், 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டம் வென்றவர் என, போலீசார் தெரிவித்தனர்.
இவர், கடந்த மாதம், போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கலில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது, அங்கு பணிபுரிந்து வந்த, ஒருவரை சரமாரியாக தாக்கி, மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அப்போது புகார் அளிக்கப்படாததால், மணிகண்டன் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE