மாதவரம், : பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்த சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால், பலத்த மழையில் சாலை உள்வாங்கி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட தட்டான்குளம் சாலை, பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்தன.
அந்த சாலைகளில், மாநகராட்சி மூலம் பராமரிப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை. சில பகுதிகளில், பெயரளவில் சாலை சீரமைப்புகள் நடந்தன. கடந்த, 7ம் தேதி முதல் தொடரும் பலத்த மழையால், பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்த சாலைகள், அரை அடி முதல் 1 அடி வரை உள்வாங்கி சேதமடைந்து உள்ளன.இதனால், சாலையில் மழை நீர் தேங்கிய நிலையில், உள்வாங்கிய சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இரவில் பயணிப்போர் நிலை மேலும் மோசமாகிறது.பெரிய விபத்து, உயிரிழப்பை தடுக்க, ஒரு சில இடங்களில் அப்பகுதியில் வசிப்போரே கற்கள் அல்லது மரக்கிளையை வைத்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்றனர். இதனால், உள்வாங்கிய சாலைகளை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, முறையாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE