கொருக்குப்பேட்டை, : கொருக்குப்பேட்டையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த 'போட்டோ'வை அவரது கணவருக்கு அனுப்பி, ஆசிட் வீசப் போவதாக மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் அவுசிங் போர்டைச் சேர்ந்தவர் பழனிசாமி, 28. இவர், வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார்.இவரது மனைவி ஜானகி, 24. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகர், முதல் தெருவைச் சேர்ந்த வினோத், 33, என்பவருடன் ஜானகிக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் கணவரை விட்டு பிரிந்து, வினோத்துடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.மூன்று மாதங்கள் வாழ்ந்த நிலையில், அவரது நடவடிக்கை பிடிக்காமல், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், தான் திருந்தி விட்டதாகக் கூறிய ஜானகி, கணவர் பழனிசாமியிடம் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், ஜானகியுடன் நெருக்கமாக இருந்த சில 'போட்டோ'க்களை, பழனிசாமியின் மொபைல் போனுக்கு அனுப்பி, 'உன் மனைவியை என்னுடன் அனுப்பி வை' என வினோத் மிரட்டியுள்ளார்.மேலும், வீட்டுக்குச் சென்று, ஜானகியின் கையைப் பிடித்து இழுத்து, 'என்னுடன் வராவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன்' என மிரட்டிஉள்ளார்.ஜானகி அளித்த புகாரின்படி, கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வினோத்தை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE