சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 21 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
தமிழகத்தில் இம்மாதம் 3ம் தேதி லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும்; டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாயின. இதுவரை 21 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.