புதுடில்லி : அன்றாடம் கொலைகள் நிகழும் சிரியா போல கேரளா மாறி வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சஞ்சித் கொலை வழக்கில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் துணை அமைப்பான இந்திய சமூக ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கேரள பா.ஜ., தலைவர் கே. சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிரியா போல கேரளாவும் கொலைகளமாக மாறி வருகிறது. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் ரகசிய உறவு உள்ளது.
மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியும் ஆதரவளிக்கின்றன. மக்களுக்கு கேரள போலீசார் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது. கேரளாவின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விளக்கியுள்ளோம்.
கேரள உணவகங்களில் 'ஹலால்' என்ற விளம்பர பலகைகள் வைக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இது, உணவு என்ற பெயரில் மக்களை பிரிக்க, சில மதவெறி குழுக்கள் இணைந்து செய்து வரும் சதிச் செயலாகும். உடனடியாக ஹலால் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE