ஏரேவான்:அர்மீனியா - அஜர்பைஜன் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே, 'ஹாட்லைன்' தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா, 1991ல், தனித் தனி நாடுகளாக பிரிந்தன. பின் இருநாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நகோர்னோ - காராபாக் என்ற பகுதிக்கு, இரு நாடுகளும் உரிமை கொண்டாடின. அப்போது நடந்த போரில், 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, 1994ல் போர் முடிவுக்கு வந்தது. சர்ச்சைக்குரிய நகோர்னோ - காராபாக் பகுதியை, அர்மீனிய படைகள் கைப்பற்றின. அங்கு, தன்னாட்சி அதிகாரம் உடைய அரசின் ஆட்சி நடந்து வருகிறது. எனினும், அந்த பகுதிக்கு உரிமைக்கொண்டாடி அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன.
கடந்த 16ம் தேதி, இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதில், ஆறு அர்மீனிய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 32 பேரை அஜர்பைஜான் வீரர்கள் கைது செய்தனர். இதனால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இந்நிலையில், அர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு இடையே, 'ஹாட்லைன்' எனப்படும், நேரடி தொலை தொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அர்மீனிய பிரதமர் நிகோல் பஷின்யன் நேற்று முன்தினம் கூறியதாவது:அர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முயற்சியாக, இருநாடுகளுக்கும் இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE