புதுடில்லி:மருத்துவ கல்வி முதுகலை பட்ட மாணவர்களுக்கான சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நிர்ணயித்துள்ள வருவாய் உச்ச வரம்பு குறித்து மறு ஆய்வு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
அதனால் இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. முதுகலை மருத்துவ பட்டப் படிப்பில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்ச வரம்பு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'எந்த அடிப்படையில் இந்த உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ஏற்கனவே கேள்வி எழுப்பிஇருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த், விக்ரம் நாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:வருவாய் உச்ச வரம்பு நிர்ணயம் தொடர்பாக மறு ஆய்வு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஒத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அதை அமர்வு ஏற்றுக் கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE