புதுடில்லி :''வழக்குகளில் நீதிபதிகளுக்கு உதவுவதுடன், நீதித்துறை மீது உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கவும் வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் சாசன தினம் மற்றும் தேசிய சட்ட தினத்தையொட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டில்லியில் கூட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:வழக்குகளில் நீதிபதிகளுக்கும், நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். நாம் அனைவரும் மிகப் பெரிய குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீதித் துறை மீது உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும். நியாயத்துக்கு குரல் கொடுக்கவும், அநியாயத்தை எதிர்க்கவும் தயங்காதீர்கள். 1949ல் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன சட்டம், அப்போது இருந்ததை விட மேம்பட்டிருப்பதுடன், அதிக சிக்கல் நிறைந்ததாகவும் மாறியுள்ளது.இது, நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் புதுமையான விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
தேசத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லவும், மக்கள் நலனை மேம்படுத்தவும் விவாதங்களும், ஆலோசனைகளும்தான் துணை புரியும். இந்த செயல்பாடுகளில் நேரடியாகவும், வெளிப்படையாகவும் தெரிவோர் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தான். உதவி தேவைப்படுவோருக்கு கை கொடுங்கள்.தேவைப்படும்போது மக்களுக்கு இலவசமாக வழக்காடுங்கள். வழக்கறிஞர்கள் தங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE