திருப்பூர்: ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை உயர்த்தக்கூடாது என, 'சைமா' சங்கம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலையுள்ள ஆடைக்கு 5 சதவீதம்; ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஆடைக்கு, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி தற்போது நடைமுறையில் உள்ளது. மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில், ஆயத்த ஆடைகளுக்கான வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது.அதன்படி, வரும் 2022, ஜனவரி 1ம் தேதி முதல், அனைத்து விலை மதிப்பிலான ஆடைகளுக்கும், 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வருகிறது. வரி வகிதம் உயர்வு, உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும், திருப்பூர் பகுதி குறு, சிறு பின்னலாடை துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.
விலை உயரும்தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:அனைத்து பின்னலாடைகளுக்கும், ஜி.எஸ்.டி., வரி, 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பின்னலாடை ரகங்களை மட்டுமே வாங்கி அணிகின்றனர். ஒரு தொழிலாளி இரண்டு செட் ஆடை வாங்க, 500 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது.
ஜி.எஸ்.டி., வரி உயர்வால், ஆடை விலை மேலும் அதிகரிக்கும். இதனால், அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமப்படுவர். எனவே, ஆயத்த ஆடைகளுக்கான வரியை உயர்த்த கூடாது.ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலை மதிப்புள்ள பின்னலாடை ரகங்களுக்கு 5 சதவீதம் என்கிற இதே நிலையில் வரி விகிதம் தொடரவேண்டும். இல்லாவிடில், 500 ரூபாய்க்கு கீழ் விலையுள்ள ஆடைகளுக்காவது, வரி விகித சலுகை அளிக்கவேண்டும்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE