வேலூர்: பாலாற்றில் உள்ள, பைப் லைன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், வேலூர் மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், வேலூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக திருப்பத்தூரில் இருந்து, வேலூர் வரை பாலாற்றில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், 20 கி.மீ., தூரத்திற்கு குடிநீர் பைப் லைன் அடித்து செல்லப்பட்டது நேற்று கண்டறியப்பட்டது. இதனால் பேர்ணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், மாதனூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், கணியம்பாடி மற்றும் வேலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பாலாற்றில் வெள்ளம் குறைந்த பிறகு தான், பைப் லைன்களை சீரமைக்க முடியும். அதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குளம், நீர் நிலைகளை பயன்படுத்தி, குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE