தானே: மஹாராஷ்டிராவில் கல்யாண மண்டபம் ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிய, அதைப்பற்றி கவலையே படாமல் அதன் அருகே நடைபெற்ற பந்தியில் இருவர் சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே கடந்த நவ.,28ம் தேதி அன்று அங்குள்ள அன்சாரி கல்யாண மண்டபம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மண்டபத்தின் அருகே சாப்பிடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தியில் சாப்பாடு பரிமாறப்பட்டு வந்தது. அப்போது மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின்போது பட்டாசு வெடித்ததன் மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மண்டபம் முழுவதும் தீ பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. தீ விபத்து ஏற்பட்டதும் பந்தியில் இருந்த அனைவரும் எழுந்துநின்று திகைத்து பார்க்க, இருவர் மட்டும் தீவிரமாக சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
தீ பற்றி எரிவதையும் அவ்வபோது திரும்பி பார்க்கும் அவர்கள், அந்த சலனமும் இன்றி சாப்பாட்டிலேயே முழு கவனத்துடன் இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. நான்கு தீயணைப்பு வண்டிகள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், 6 இருசக்கர வாகனங்கள், மண்டபத்தில் இருந்த சில இருக்கைகள் மற்றும் அலங்கார பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியதாக தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது.