மேட்டுப்பாளையம்: பட்டு நுால் விலை கிலோ, 2,000 ரூபாய் வரை உயர்ந்ததால், நெசவாளர் வாழ்வாதாரம் பாதிக்கும் என சிறுமுகை கைத்தறி சேலைகள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.கோவை மாவட்டம், சிறுமுகையில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் மென்பட்டு, சுத்தப்பட்டு, காட்டன், கோரா காட்டன் சேலைகளை நெசவு செய்து வருகின்றனர். வாரம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பட்டு சேலைகள் உற்பத்தி செய்கின்றனர்.தற்போது பட்டு நுால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கைத்தறி பட்டுச் சேலைகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமுகை அனைத்து கைத்தறி சேலைகள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது:கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு கிலோ பட்டு நுால், 3,000 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 5,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. நுாலை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்தியுள்ளனர்.விலை உயர்வால், நுகர்வு குறைந்துள்ளது. கைத்தறி நெசவு தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நுால் விலை உயர்வை, மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE