சென்னை: சென்னையில் இன்று (டிச.,1ம் தேதி) நடந்த செயற்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க., தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கூடி நடந்து வருகிறது.
முன்னதாக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., அவை தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு அந்த பதவிக்கு ஒருவரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டதால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிகமாக அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE