ஆத்தூர்: டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம், 6.11 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மூன்று பேரை கைது செய்த போலீசார், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் நகை, பணத்தை மீட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், கொத்தாம்பாடியை சேர்ந்தவர் மோகன், 45. இவர், ஏத்தாப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். கடந்த ஆக., 4 இரவு, 9:45 மணிக்கு, கடையை மூடிவிட்டு, 6.11 லட்சம் ரூபாயுடன் பைக்கில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்தவர்கள், பணத்தை கொள்ளையடித்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர். கடந்த மாதம், திருப்பூரில் நடந்த வழிப்பறி வழக்கில், திருநெல்வேலி, மகாதேவன்குளம் கார்த்திக், 29, ஈரோடு, கருங்கல்பாளையம் குமரேசன், 30, ஆகியோரை கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில், ஏத்தாப்பூரில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடித்துள்ளதை ஒப்புக்கொண்டனர். நேற்று முன்தினம், அவர்களை காவலில் எடுத்து வந்து விசாரித்தபோது, திருநெல்வேலி, தாழையூத்தை சேர்ந்த, ராஜதுரை, 25, என்பவரும் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை, ஏத்தாப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை வழக்கில் கார்த்திக், குமரேசனையும் நேற்று கைது செய்தனர். இவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE