சென்னை : 'தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், நாளை முதல் 6ம் தேதி வரை கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பச்சலனம்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதனால், நாளை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
நாளை மறுதினம் நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சூறாவளி காற்றுஅடுத்த நாளான 6ம் தேதி, நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரும். நாளை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை நெருங்கும்.
இதனால், மத்திய வங்கக்கடல் பகுதிகள், தமிழகம், ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE