ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தாய், மகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் மருத்துவ துப்புரவு ஊழியர் காளியம்மாள், 59. இவர் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் ரயில்வேயில் பணிபுரிந்த போது உயிரிழந்தார்.
சண்முகப்பிரியா, 38, மேகலா, 34 என இருமகள்கள் உள்ளனர். சண்முகப்பிரியா திருமணமாகி மதுரையில் உள்ளார். மேகலா, தாயுடன் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் உள்ளார்.நேற்று காலை தாய் வீட்டிற்கு வந்த சண்முகபிரியா, வீடு உள்புறமாக பூட்டி கிடந்ததால் பின்பக்க கதவை தள்ளி உள்ளே சென்று பார்த்தார். அப்போது தாயும், தங்கையும் படுக்கையில் உடல் முழுதும் எரிந்த நிலையில் கிடந்தனர். சண்முகப்பிரியா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
விசாரணை
சண்முகப்பிரியா கூறுகையில், ''டிசம்பர் 6 இரவு 8:00 மணிக்கு அலைபேசியில் தாய் அழைத்தார். ரேஷனில் பொருட்கள் வாங்க நாளை மண்டபம் வா என கூறினார். அதன்படி வந்தேன். முன்கதவு பூட்டியிருந்த நிலையில் வீடு முழுதும் கரும்புகை பரவி கிடந்தது. பின்கதவை தள்ளி உள்ளே சென்றேன். '' இருவரும் எரிந்து கிடந்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லை. எவ்வளவு இருந்தது என தெரியவில்லை,'' என்றார்.
நகைக்காக கொலையா?
போலீசார் கூறியதாவது: காளியம்மாள் சேமித்த பணத்தில் மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷன் அருகில் 15 லட்சம் ரூபாயில் புதிய வீடு கட்டி வருகிறார். அவரிடம் நகை பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொண்டு, இருவரையும் எரித்து கொலை செய்திருக்கலாம். காளியம்மாளுக்கு கடன் தொல்லையோ, பணியில் பிரச்னையோ இல்லை. இருவரது அலைபேசியும் திருடு போய் உள்ளது. இவர்களது வீடு அருகில் இந்திய கடலோர காவல்படை முகாம் தவிர, வேறு எந்த குடும்பத்தினரும் இல்லாததால், உயிருக்கு போராடிய இருவரது சத்தமும் வேறு யாருக்கும் கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவ்வாறு போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மற்றொரு சம்பவம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கண்டசாவடியைச் சேர்ந்தவர் சரோஜா, 80; கணவரை இழந்தவர். இவர் மகள் பூங்காவனம், 56; இவர் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். தாயும், மகளும் தனியாக வசித்து வந்தனர்.இருவரும் நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அருகில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பூங்காவனம் நிர்வாண நிலையில் கிடந்தார். இருவரும் அணிந்திருந்த நகைகளும் கொள்ளை போனது தெரிந்தது.கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது.பூங்காவனம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'கொலையாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE