சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார்.
தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் சேர்ந்த, 'புரூடெண்ட் எலக்ட்டோரல்' அறக்கட்டளைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை, இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனிடம், அக்டோபர் 20ம் தேதி கடிதம் சமர்ப்பித்தது.

அதன் விபரம்: கடந்த 2020- - 21ம் நிதியாண்டில், தேர்தல் நிதியாக, 245.72 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதில், 209 கோடி ரூபாய், பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, 19 பெரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்ச தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், அவருக்குச் சொந்தமான, 'பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ்' நிறுவனம் வாயிலாக வழங்கி உள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடி ரூபாயும், பல்வேறு மாநில கட்சிகளுக்கு 34 கோடி ரூபாயும், மார்ட்டின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காங்., கோரிக்கை
இதற்கிடையில், 'சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் மார்ட்டின், பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதி வழங்கிய பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE