மும்பை : இந்திய ரூபாய்க்கு நிகரான 'டிஜிட்டல் கரன்சி'யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், 'சி.பி.டி.சி.,' எனும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி வெளியீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க வாய்ப்புள்ள 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களின் புழக்கம் பெருகி வருவது குறித்து கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பொருளாதார நிலவரம், உருவெடுத்து வரும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களுக்கான சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் காரணமாக, இந்திய ரூபாய்க்கு நிகரான டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE