சென்னை:பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுதும் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 80 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
பொதுத்துறை வங்கி களை தனியார் மயமாக்குவது குறித்து, பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா - 2021, லோக்சபாவில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து, சென்னை அண்ணா சாலை அருகே, காயிதே மில்லத் நினைவிடம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இரண்டாவது நாளாக நேற்று, வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 11 லட்சம் காசோலைகளும்; நாடு முழுதும் 80 ஆயிரம் கோடி மதிப்பிலான, 80 லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகளும் முடங்கின.முதல் நாள் ஏ.டி.எம்., களில் போதிய பணம் இருப்பு இருந்தது. பெரும்பாலான ஏ.டி.எம்.,களில் பணம் காலியானதால், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,களை தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE