கோவை: கேரளாவில் பா.ஜ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோவையில் போலீசார் 'அலர்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
தமிழகம் உட்பட பிற மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் அனைத்து உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'கேரளாவில் நடந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்துக்கு எதிர்வினையாக மாற்று மதத்தினர் அல்லது கட்சியின் முக்கிய நபர்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்கி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் அனைத்து உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள வழிபாட்டு தலங்கள், முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வன்மம் பரப்பினால் கைது!
கேரளா சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில், சில அமைப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற தேவையில்லாத பதிவுகளை பகிர்ந்து, பதற்றத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை போலீசார் எச்சரித்துள்ளனர். கோவையை சேர்ந்த நபர்களின் சமூகவலைதள பதிவுகளையும் போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE