புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் நான்கு வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE