சென்னை : பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டம், சாத்துாரை சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, 3 கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். இவரை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜேந்திர பாலாஜி, 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார். பழைய பட்டன் மாடல் மொபைல் போனை பயன்படுத்தி வருகிறார். ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளுக்கு மாத்திரை சாப்பிட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர், கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படையினர் விரைந்துள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE