வாரணாசி: ‛பசுவை பற்றி பேசுவதையும், பசுவின் சாணத்தை பற்றி பேசுவதையும் குற்றமாக்கியுள்ளனர். பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், எங்களுக்கு பசு ஒரு தாய் போன்றது,' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உ.பி., மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் ரூ.870 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (டிச.,23) அடிக்கல் நாட்டினார். இதற்கான விழாவில் மோடி பேசியதாவது: முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று அவருக்கு தலைவணங்குகிறேன். இந்த நாளை நாடு 'விவசாயிகள் தினமாக' கொண்டாடுகிறது. பால்வளத்துறையை வலுப்படுத்துவது நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கிறது. அது தொடர்பான திட்டத்திற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் பால் உற்பத்தி 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்று உலக அளவில் 22 சதவீத பாலை இந்தியா உற்பத்தி செய்கிறது. நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பால்வளத் துறையின் விரிவாக்கத்திலும் மிகவும் முன்னேறி உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பசுக்கள், எருமை மாடுகளை கேலி செய்பவர்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளை நம்பி இருக்கும் வாழ்வாதாரத்தை மறந்து விடுகிறார்கள்.
சிலர் இங்கு பசுவை பற்றி பேசுவதையும், பசுவின் சாணத்தை பற்றி பேசுவதையும் குற்றமாக்கியுள்ளனர். பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், எங்களுக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது. பால்வளத்துறையில் புதிய ஆற்றல், கால்நடை வளர்ப்பு, வெண்மை புரட்சி ஆகியவை விவசாயிகளின் நிலையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE