லக்னோ : அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அருகே பா.ஜ., தலைவர்களின் உறவினர்கள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிலங்களை அபகரிப்பதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த, உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 'அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின், அந்த இடத்தின் அருகே பல ஏக்கர் நிலங்களை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மேயர்களின் உறவினர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் இணைந்து அபகரித்து வருகின்றனர்' என, பலரும் புகார் தெரிவித்தனர். காங்., கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த நில அபகரிப்பு புகார் குறித்து வருவாய்த் துறை சிறப்பு செயலர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

கண்துடைப்பு
ஆனால் பா.ஜ., தலைவர்கள் மீதான நில அபகரிப்பு புகார் பற்றி விசாரிக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது, வெறும் கண்துடைப்பு எனவும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் காங்., பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE