புதுடில்லி: ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது: ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் வாரந்தோறும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஆசியாவில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இந்தியாவில் தற்போது கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் அதிகளவில் உள்ள மாநிலங்களில் கேரளா, மஹாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

இந்தியாவின் 17 மாநிலங்களில் இதுவரை 358 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 114 பேர் குணமடைந்துள்ளனர். இரவுநேர ஊரடங்கு மற்றும் பெரிய கூட்டங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த டிச.,21ம் தேதியே மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. நாடு முழுவதும் தகுதி வாய்ந்தோரில் 89 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்; 61 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 18,10,083 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 4,94,314 ஆக்சிஜன் படுக்கைகள், 1,39,300 ஐ.சி.யு படுக்கைகள், 24,057 குழந்தைகளுக்கான ஐ.சி.யு படுக்கைகள் மற்றும் 64,796 குழந்தைகளுக்கான ஐ.சி.யு அல்லாத படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் குறிப்பிட்ட அளவிலான அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதாவது, ஒமைக்ரான் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்புகள் ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாகிறது. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கோவிட்-19, டெல்டா வைரஸ் போன்றவைக்கான சிகிச்சை நெறிமுறைகள் ஒமைக்ரானுக்கும் பொருந்தும். முதல் அலையில் இருந்து 2வது அலை உருவாகியபோது ஆக்சிஜன் தேவை 10 மடங்கு அதிகரித்தது. இவ்வாறு அவர் கூறினார்.