புதுச்சேரி, : கனடா நாட்டில் குடியுரிமை மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1.65 கோடி வசூலித்து மோசடி செய்த மதபோதகர், இலங்கை தமிழர் மூவர் உட்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
.புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி பாலதண்டாயுதம் வீதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் நித்தியானந்தம், 57; திருக்கனுாரில் மத போதகராக உள்ளார். இவருக்கு, கடந்த 2018ம் ஆண்டு, புதுச்சேரி வெண்ணிலா நகரைச் சேர்ந்த மதபோதகர் ஜான்சன் சகாயதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்துார் வடவள்ளி, 3வது குறுக்கு தெருவில் வசிப்பவர், இலங்கையைச் சேர்ந்த ரமணி. இவர், கனடா நாட்டில் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ,) நடத்தி வருவதாகவும், ஏழை மக்களை கனடாவுக்கு அனுப்பி, அங்கு குடியுரிமை, வேலை வாங்கித் தருவதாகவும் நித்யானந்தத்திடம் ஜான்சன் கூறினார்மேலும், இதற்கு ஒரு நபருக்கு ரூ. 10 லட்சம் செலவாகும். முதல்கட்டமாக ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். மீதி பணம் கனடா நாட்டிற்கு சென்ற பின்பு, அங்கு வேலை செய்யும்போது மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வர்' என, கூறினார். இதை நம்பிய ஸ்டீபன் நித்தியானந்தம் மற்றும் சர்ச்சில் உறுப்பினராக உள்ள 14 பேர், தலா ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 15 லட்சத்தை, என்.ஜி.ஓ., பணியாளரான சென்னை அடையாறு மத போதகர் சைமன் ஜோஸ்வாவிடம் கொடுத்தனர். கனடாவுக்கு செல்வது எப்படி என ஒரு கூட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற 165 பேர் கனடா செல்ல விருப்பம் தெரிவித்தனர்.கனடா செல்ல விரும்பியவர்கள், ரூ.1.65 கோடியை, சென்னையில் வசிக்கும்
இலங்கை தமிழர் நிக்கோலஸ் செல்வக்குமார், ரமணி மகள் கிருஷ்யாணி, திருச்சியை சேர்ந்த டிரைவர் தமிழ்செல்வன் ஆகியோரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர். ஆனால் கனடா நாட்டிற்கு யாரையும் அனுப்பவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பணத்தை பெற்று தருமாறு நித்தியானந்தத்திடம் கேட்டனர். அவர், ஜான்சனிடம் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. ரமணியை மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. இது தொடர்பாக நித்தியானந்தம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் ரமணி, நிக்கோலஸ் செல்வகுமார், கிருஷ்யாணி, மத போதகர் ஜான்சன், சைமன் ஜோஸ்வா, டிரைவர் தமிழ்செல்வன் ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.