சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்கரைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும். டிச.,31ல் வெளியூர் செல்பவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து, ரயில் அல்லது பேருந்துகளில் செல்ல வேண்டும். கார்களில் செல்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓய்வெடுத்து பயணத்தை தொடரலாம். வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

வழிபாட்டு தலங்களில் கோவிட் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டமாக கூடுவதையும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.கண்ணியமற்ற முறையிலும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 ,112 எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE