சென்னை: ‛நான் முதல்வராக வரவேண்டும் என பதவி வெறி இல்லை. ஆனால், தமிழகத்தை பாமக ஆள வேண்டும்' என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அன்புமணி பேசியதாவது:
நான் முதல்வராக வரவேண்டும் என பதவி வெறி இல்லை. ஆனால், தமிழகத்தை பா.ம.க ஆள வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் அடைவோம். அமைதியாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்; செய்ய வேண்டியதை செய்து கொண்டிருக்கிறோம்.

காரியமா, வீரியமா என்றால் தற்போதைய சூழலில் காரியம் தான் முக்கியம். கட்சி துவங்கிய 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்தது. துவங்கப்பட்ட 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியை பிடித்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இனியும் இப்படியே இருந்து விடமுடியாது. 2016ல் நாம் ஆள வேண்டுமென கேட்டோம். 2019 மற்றும் 2021ல் அவர்கள் ஆள வேண்டுமென கேட்டோம். 2026ல் நாம் ஆள வேண்டுமென கேட்போம்.

எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான்காண்டுகள் எளிமையான முதல்வராக இருந்தார். பல்வேறு எதிர்ப்புகளை மீறி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார். 42 ஆண்டுகால போராட்டத்தால் கிடைத்த இடஒதுக்கீட்டுக்கு சப்பை காரணம் சொல்லி உயர்நீதிமன்றம் தடுத்தது. அடுத்த முறை மக்கள் திமுக.,வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பா.ம.க.,வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் 2026ம் ஆண்டில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைத்து, பா.ம.க தலைமையில்தான் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE