சென்னை : 'வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும், 6,230 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், எதிர்பார்க்காத அளவு கனமழை பெய்ததால், பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால், குடியிருப்புகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. விலங்குகள் மற்றும் மனித உயிரிழப்பும் ஏற்பட்டது. வேளாண் பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இயல்புநிலை
தமிழக அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற் கொண்டு, குறுகிய காலத்தில் இயல்புநிலையை மீட்டெடுத்துள்ளது. பெருமழையால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய
குழுவினர், நவ., 27ல் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது, தமிழகத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாய். சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த, உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரி செய்வதற்காக 4,719.62 கோடி ரூபாய் என மொத்தம், 6,230.45 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில், நவ., 16, 25, டிச., 15 ஆகிய நாட்களில், சேத விபரங்களுடன் கூடிய, விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக, மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள், அதை மேலும் கடுமையாக்கி உள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியும், முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை சரி செய்யவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும், தேவையான நிதியை உடனே ஒதுக்க, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE